பகுதி – 1.

பகுதி – 1.

பகுதி – 1.

ஊட்டி குளிர் மைனஸ் டிகிரியில் உறைந்து போயிருக்க, சொட்டருக்குள், அடர்த்தியான கம்பளிக்குள் சுருண்டிருந்தாள் சாருமதி. நேரம் ஆறுமணியைக் கடந்து ஓடிக் கொண்டிருக்க, கண்களுக்கு அது புலன் ஆனாலும் எழுந்துகொள்ள மனம் வரவே இல்லை.

இப்பொழுது எழுந்து கொள்ளவில்லை என்றால், அலுவலகத்துக்குச் செல்ல தாமதமாகும் என புத்தி இடித்துரைக்க, கம்பளிக்குள் இருந்து வெளியே வந்தாள். கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டவள், அதை கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“ஹப்பா, என்ன குளிர்... இந்த வருஷம் குளிர் கொஞ்சம் அதிகம்தான்” வாய்விட்டே சொன்னவள், எழுந்து கிச்சனுக்குப் போனாள். இரவில் அலுப்பின் காரணமாக சிங்கில் போடப்பட்டிருந்த பாத்திரங்கள் அவளைப் பார்த்து புன்னகைக்க, ‘ஹையோ’ என்று இருந்தது.

“ஏன் சாரு இப்படி பண்ற?” தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், காபி பாத்திரத்தை கழுவிவிட்டு, வேகமாக டீ தயாரித்தாள். வாங்கி வைத்திருந்த பால் ஃப்ரிஜில் இருக்கவே, அதை வாங்க வெளியே செல்ல வேண்டி இருக்கவில்லை.

அந்த டீ நுரைபொங்க கொதிக்கவே, அதில் சர்க்கரையைக்கலந்து எடுத்தவள், மீண்டுமாக படுக்கையில் வந்து அமர்ந்து, காலை மடக்கி படுக்கையில் வைத்துக் கொண்டாள்.

அந்த குளிருக்கு இதமாக, டீ சூடாக தொண்டைக்குழிக்குள் இறங்க, அத்தனை புத்துணர்ச்சியாக உணர்ந்தாள்.

“வாவ்... டிவைன்...” சொர்க்கத்தை அனுபவிக்கும் உணர்வில் அப்படியே சில நொடிகள் இருந்தவள், மீண்டுமாக அந்த சூடான டீயைப் பருகினாள். ஆவி பறக்க, அதன் சுவையும், மணமும் அந்த காலை வேளையை அவளுக்கு அவ்வளவு அழகாக்கிக் கொடுத்தது.

முழுதாக பத்து நிமிடங்கள் செலவழித்து அந்த டீயின் சுவையில் லயித்து இருந்தவள், அந்த நிமிடங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்ந்தாள். இப்படியான சின்ன விஷயங்களைக் கூட அவள் ரசிப்பதால் தான், அவளால் இந்த தனிமையை விரட்ட முடிந்தது.

இந்த ஊட்டிக்கு வந்த புதிதில் இந்த குளிருக்கு பழகவே மிகுந்த சிரமப்பட்டாள். தனி மனுஷி... இங்கே வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னர், அவள் MBA., படித்து முடித்த வருடம், அவளது பெற்றவர்கள் இருவரும் ஒன்றாக இறந்து போயிருந்தார்கள்.

வேலைக்குப் போயிருந்த இடத்தில் அம்மா மாரடைப்பில் இறந்துவிட்டார் என்ற சேதி அறிந்த மறு நிமிடம், படுக்கையில் இருந்த அவளது தகப்பனும் உயிரை விட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ஸ்ட்ரோக் அவரைக் கட்டிலில் முடக்கி இருந்தது.

சாதாரண நடுத்தரவர்க்க வாழ்க்கை... ஆனாலும் ஒரே பெண் என்பதால் பெற்றவர்கள் இருவருமே அவளது நியாயமான சின்ன ஆசைகள் எது என்றாலும் அதை நிறைவேற்றி வைத்து பாசமாகவே பார்த்துக் கொண்டார்கள்.

மகளை வேலைக்கு அனுப்பி அழகு பார்க்க வேண்டும் என்ற அவர்களது தீராத ஆசையால், மகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற நினைப்பை தள்ளி வைத்துவிட்டு, அவளைப் படிக்க வைத்தார்கள்.

ஆனால் அவள் அப்படி வேலைக்குப் போவதை பார்க்கும் முன்பாகவே இந்த உலகத்தை விட்டு, அவளைத் தனிமையில் தள்ளிவிட்டு மாண்டு போனார்கள்.

அவளை இன்றும் தைரியமாக இயங்க வைப்பது அவளைப் பெற்றவரின் வார்த்தைகள்தான்.

ஒரு சின்ன கார்மெண்ட்ஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார் சாருமதியின் தாய். அவளது அப்பா அதே கார்மென்சில் ட்ரைவராக இருந்தார். முதலாளிக்கும் அவர் ட்ரைவர் என்பதால், அங்கே சில சிறப்பு சலுகைகள் எல்லாம் இருந்தது.

அந்த சலுகைகளில் ஒன்றுதான், சாருமதியின் தகப்பன் வேலாயுதத்தின் மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கவரேஜ். அவருக்கென PF மெடிக்ளேயிம் என அனைத்தும் இருக்கவே, வேலாயுதத்தின் சிகிச்சைக்கு பெரும் உதவியாக இருந்தது.

அவரது முதலாளியும் கொஞ்சம் உதவி செய்யவே, வீடு வறுமையில் சிக்காமல் தப்பித்தது. அவளது அம்மா சாவித்திரிக்கு அவர் கொஞ்சம் இன்கிரிமெண்ட் வேறு போட்டு கொடுத்து பார்த்துக்கொள்ளவே, எல்லாம் சரியாகவே சென்றது.

“அம்மாடி, உங்க அம்மா மாரடைப்பில் இறந்துட்டாங்கம்மா” என சாருமதியின் அலைபேசிக்கு தகவல் வந்த அடுத்த நிமிடம் அவள் மொத்தமாக உறைந்து போனாள்.

அவளது தகப்பனிடம் அவள் தயங்கியவாறு விஷயத்தைச் சொல்ல, ஓரளவுக்கு பேசத் துவங்கியிருந்த அவளது தகப்பன், மகளை அருகே அமர்த்தி பேசினார்.

“அம்மாடி, நீ இப்படி உடைஞ்சு போய்டக் கூடாது. நீ ரொம்ப நல்லா, சந்தோஷமா வாழறதைப் பாக்கத்தான் நாங்க ஆசைப்பட்டோம். நாங்க எப்போதும் உன் கூடவேதான் இருப்போம். நாங்க இல்லைன்னு நீ வருத்தமே படக் கூடாது” சொன்னவரின் வார்த்தைகள் நின்று போயிருக்க, அவரும் அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருந்தார்.

ஒரு இழப்பையே அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் போயிருக்க, இந்த இரட்டை இழப்பை அவள் எப்படித் தாங்குவாள்? சாருமதி மொத்தமாக உடைந்து போயிருக்க, இறுதி காரியங்கள் அனைத்தையும் பெற்றவர்களின் முதலாளியே முன்னால் நின்று பார்த்துக் கொண்டார்.

அவரது மனைவியும் சாருமதிக்கு வந்து ஆறுதல் சொல்லி, தேற்றி... அவளுக்கும் அதே கார்மென்சில் ஒரு மேனேஜர் பதவியை போட்டுக் கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டார்கள்.

பெற்றவளும் வேலைக்குச் சென்றதால், சிறு வயதிலேயே சமையல் எல்லாம் அவள் கற்றுக் கொண்டாள். துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது என அனைத்தையும் இயல்பாகவே அவள் கற்றுக் கொண்டிருக்க, வாழ்க்கையை சம்மாளிப்பது அவளுக்கு கொஞ்சம் இலகுவாகவே இருந்தது.

ஒரு வருடம் அவள் அந்த கார்மென்சில் வேலை செய்ய, நாளுக்கு நாள் அவள் கொஞ்சம் ஓய்ந்து போவது அவளது முதலாளி அம்பலவாணனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

“என்னம்மா இப்படி உடைஞ்சு போற? தைரியமா இருக்கணும். நான் வேண்ணா உன் சித்தப்பா கிட்டே பேசவா?” அம்பலவாணன் அவளிடம் கேட்டார்.

“இல்ல அங்கிள், வேண்டாம்... நான் நல்லாத்தான் இருக்கேன்” சொன்னவள் அமைதியாக தன் வேலையைப் பார்க்கப் போய்விட, பெரும் யோசனையானார்.

இறப்புக்கு வந்த அவளது சித்தப்பாவும் சரி, அம்மாவின் உடன்பிறந்த அக்கா, அண்ணாவும் சரி, எங்கே இவளது பொறுப்பு தங்கள் தலையில் விழுந்துவிடுமோ என மின்சாரமயானத்தொடு கலைந்து சென்றது அவர் நினைவுக்கு வந்து போனது.

‘மனிதர்கள், பணக்காரங்க வீட்டில் ஒட்டுதல் இல்லாமல் தனித்து ஓடினால், இல்லாதவர்கள் வீட்டில் சுமையாகிப் போகிறார்கள்’ எண்ணியவருக்கு பெருமூச்சு எழுந்தது.

‘இவளுக்கு ஏதாவது செய்யணுமே... இவளை இப்படியே விடவும் முடியாது’ எண்ணியவர், சாருமதிக்காக நிறையவே யோசித்தார். அவளை அப்படியே விட்டால், அது சரியாக இருக்காது என அவருக்குத் தோன்றியது.

அந்த நேரம்தான் அவரது நண்பன் ஊட்டியில் ஒரு நிறுவனத்தை நடத்துவது அவரது நினைவுக்கு வந்தது. அங்கே மேனேஜர் வேண்டும் என அவர் கேட்டிருக்க, சாருமதியை அங்கே அனுப்பி வைக்க முடிவெடுத்தார்.

மறு வாரமே அவளை அழைத்து அவளிடம் விஷயத்தைச் சொன்னார்.

“என்னம்மா, ஊட்டிக்கு போறியா? உனக்கு சம்மதமா?” அவள் சம்மதம்தான் முக்கியம் என்பதால் கேட்டார்.

அவள் அமைதியாக இருக்கவே, “நீ உடனே பதில் சொல்லணும்னு இல்லை. நல்லா யோசிச்சு, நிதானமாவே பதில் சொல்லும்மா. ஒரு இட மாற்றம், புது மனுஷங்க, புது வேலை... இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு நினைக்கறேன்.

“அங்கே உனக்கு பிடிக்கலை என்றாலோ, கிளைமேட் ஒத்துக்கலை என்றாலோ எப்போ வேண்ணா நீ இங்கே வரலாம். உனக்குன்னு ஒரு வேலை எப்போதும் இங்கே தயாரா இருக்கும்” அவர் சொல்ல, அவளது கண்கள் நிறைந்தது.

ரத்த சொந்தங்களுக்கு கூட இல்லாத ஒரு அக்கறை அவருக்கு தன்மேல் இருக்க, அவளுக்குமே ஒரு மாறுதல் அவசியமாக இருந்தது.

“அங்கே தங்கறதுக்கு எல்லாம்...?” பெரும் தயக்கத்தோடு கேட்டாள். வேலைக்கு ஏற்பாடு செய்து தரும் அவரிடமே, அனைத்தையும் பார்த்துக் கொள்வாயா? எனக் கேட்பது அவளுக்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

“உன்னை அப்படியே அனுப்பிடுவேனாம்மா? அவங்க வீட்டுக்கு பின்னாடியே ஒரு சின்ன கெஸ்ட் ஹவுஸ் இருக்காம். நீ போனால் அங்கேயே தங்கிக்கலாம்னு சொன்னான். வாடகை எல்லாம் கொடுக்க வேண்டாம்...” அவர் சொல்ல, அதற்கு மேலே பெரிதாக அவள் எதையும் யோசிக்கவில்லை.

“சரி அங்கிள், நான் ஊட்டிக்கு போறேன்...” அவள் தன் சம்மதத்தைச் சொல்லிவிட, உடனே அவர் தன் நண்பனுக்குப் பேசினார்.

அடுத்த மாதமே சாருமதி ஊட்டிவாசி ஆகிவிட, சென்னையில் கத்திரி வெயிலில் பழகியவளுக்கு, இந்த ஓட்டி குளிரில் இருப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.

கொஞ்சம் பயந்தபடியே வந்த சாருமதியை, அம்பலவாணனின் நண்பன் ரவி சாதாரணமாகவே வரவேற்றார். ஆனால் அவரது மனைவிக்கு, சாருமதியை பார்த்ததில் இருந்தே பிடிக்கவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

இப்பொழுது சாருமதி பார்க்க வந்திருக்கும் வேலையை, இதற்கு முன்னர் பார்த்திருந்தது அவளது ஒன்றுவிட்ட தம்பிதான். ஆனால் அவன் வேலையை சரியாக பார்க்காமல், குடித்துவிட்டு சுற்றியதாலேயே ரவி அவனை வேலையில் இருந்து விடுவித்து இருந்தார்.

ஆனால் சோபனாவுக்கு சாருமதி வந்ததாலேயே தன் கணவன் தன் தம்பியை மீண்டும் வேலைக்கு எடுக்கவில்லை என்ற கோபம் இருக்க, சாருமதியை நேரில் பார்ப்பதைக் கூட அவள் வெறுத்தாள்.

சாருமதி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் ஒரு ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீடுதான். படுக்கையறைக்குள் புதிதாக இப்பொழுது கட்டிய ஒரு அட்டாச்ட் பாத்ரூம், டாய்லெட் இருந்தது.

அந்த வீட்டில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தது அங்கேயே இருந்த ஒரு சோபா செட் மட்டுமே. படுக்கையறையிலும் ஒரு கட்டிலும் மெத்தையும் ஏற்கனவே இருக்க, அதைத்தான் இவள் உபயோகித்து வந்தாள்.

TV, கிரைண்டர் என எதுவும் அங்கே கிடையாது. அங்கே இருந்த ஃப்ரிட்ஜ் கூட அவள் வாங்கியது கிடையாது, அந்த வீட்டிலேயே இருந்தது தான். சமையலுக்குத் தேவையான பொருட்கள் கூட அங்கேயே இருக்க, அவள் எதையும் வாங்கத் தேவை இருக்கவில்லை.

அவள் செல்ல வேண்டிய அலுவலகம், மெயின் ரோட்டில் செல்வதாக இருந்தால் ஆறு ஏழு கிலோ மீட்டர்கள் இருக்க, இவளது வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஒற்றையடிப்பாதை வழியாக நடந்தால் இரண்டு கிலோ மீட்டரில் இருந்தது.

அருகே இருக்கும் கோவிலுக்குச் செல்ல, காய்கறி வாங்க, பால் வாங்க என சற்று தூரங்களுக்குச் செல்ல, சைக்கிள் வைத்திருந்தாள். ஸ்கூட்டி வாங்கச் சொல்லி அலுவலகத்தில் பலர் சொல்லியும் அதைப்பற்றி அவள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

கையில் இருந்த டீ முடியவே, எழுந்து சென்று ஹீட்டரை போட்டுவிட்டு கிச்சனுக்கு வந்தவள், டிபன், லஞ்ச் தயாரிக்கத் துவங்கினாள். அந்த பனி படர்ந்த வெளியில் அவளுக்கு நடக்க விருப்பம் இருந்தாலும் அதற்கு உடல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற உண்மை புரியவே அமைதியாக சமையலைத் தொடர்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையல் வேலை முழுதாக முடிய, ‘குளிக்கப் போகலாம்...’ என அவள் நினைத்த நேரம்,

“யாராவது வாங்களேன்... ஓடி வாங்க...” தன் முதலாளியம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்க, கால்கள் இரண்டும் மின்னல் வேகத்தில் அங்கே பாய்ந்து இருந்தது.

தேடலுக்கான முடிவு இல்லை
" பகுதி – 1. " - படைப்பை ரேட் செய்யுங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sangeetha Chelvam
    30 ஆகஸ்ட் 2024
    அருமை இன்பா மேம் புதிதாக கதைகளை பதிப்பித்ததற்கு மிகவும் நன்றி.தனித்திருக்கும் சாருமதி ஆரம்பமே அருமையாக இருக்கிறது ஒவ்வொரு கதையும் தங்கள் வித்தியாசமான கதைக்களம் கதாபாத்திரங்கள் என்னை வியக்க வைக்கிறது
  • author
    K.Lakshmi Lakshmi
    05 ஜூலை 2025
    good
  • author
    Mani Mozhi
    03 ஜூலை 2025
    🥰🥰🥰🥰🥰
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Sangeetha Chelvam
    30 ஆகஸ்ட் 2024
    அருமை இன்பா மேம் புதிதாக கதைகளை பதிப்பித்ததற்கு மிகவும் நன்றி.தனித்திருக்கும் சாருமதி ஆரம்பமே அருமையாக இருக்கிறது ஒவ்வொரு கதையும் தங்கள் வித்தியாசமான கதைக்களம் கதாபாத்திரங்கள் என்னை வியக்க வைக்கிறது
  • author
    K.Lakshmi Lakshmi
    05 ஜூலை 2025
    good
  • author
    Mani Mozhi
    03 ஜூலை 2025
    🥰🥰🥰🥰🥰