டின்னர் ஆறிப்போய் வெகுநேரம் கழித்து கௌதம் வெங்கடேஷ் வீட்டிற்குள் நுழைந்தான்.
`படார்!` என்று ஒரு சத்தத்துடன், அவன் இஷா ராவின் முன்னால் ஒரு விவாகரத்து ஒப்பந்தத்தை விட்டெறிந்தான்.
“லாவண்யா கண் முழிச்சிட்டா..திருமதி வெங்கடேஷ்ஷா அவ மட்டும்தான் இருப்பான்னு நான் அவளுக்கு சத்தியம் பண்ணியிருக்கேன். இஷா, இதுல கையெழுத்துப் போடு. நாம டைவர்ஸ் பண்ணிக்கப்போறோம்.”
இஷாவின் உறவினர் பெண் லாவண்யாக்கு சுயநினைவுக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், இது என்றாவது ஒருநாள் நடக்கும் என்று இஷா எதிர்பார்த்துத்தான் இருந்தாள். இருந்தாலும், அவள் அவனை நிமிர்ந்து பார்த்து, கசப்புடன் கேட்டாள், “இன்னமும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?”
கௌதம் ஏளனமாகச் சிரித்து, “நீ எப்போவுமே ஒரு பேராசை பிடிச்ச, திமிர் பிடிச்ச பொண்ணு. நான் எதுக்கு உன்னை நம்பணும்? இஷா, என்னை திரும்பத் திரும்பப் பேச வைக்காத. இதுல கையெழுத்துப் போடு, இந்த ECR-ல் உள்ள பங்களா உனக்கு. நாம பிரியறதுக்கு நான் தர்ற பரிசு இதுதான்!”
ஹ... இஷாவின் கண்களில் கேலி மின்னியது. தன்னை வெறுங்கையோடு அனுப்பாமல் ஏதோ கருணை காட்டுவதாக இவன் நினைக்கிறானா?
அவன் தூக்கி எறிந்த விவாகரத்து ஒப்பந்தத்தைக் கையில் எடுத்தாள். அவன் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஏற்கெனவே அவன் பெயர் இருந்தது. அதைப் பார்த்ததும் இஷாவின் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டது. கண்கள் லேசாகக் கலங்கின. ஆனால், அடுத்த கணமே தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
“பாட்டி சம்மதிச்சாங்களா?”
“பாட்டி உனக்கு எப்பவுமே துணை நிப்பாங்கன்னு நினைக்கிற அளவுக்கு உனக்கு என்ன தைரியம்?” கௌதம் வெங்கடேஷ் அவளைக் கோபமாகப் பார்த்தான். “நாம எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு உனக்கு நல்லாத் தெரியும். இஷா, பேராசைப்படாத. என் வெறுப்பை இன்னும் அதிகமா சம்பாதிச்சுக்காத.”
இஷா நக்கலாகச் சிரித்தாள். “ஏற்கனவே நீங்க என்மேல வெறுப்பாதான் இருக்கிங்க..இதுல என்ன பெரிய வித்தியாசம்?”
கௌதமின் முகம் சட்டென்று கோபத்தில் இறுகியது. “இஷா!”
இஷா ஒரு பேனாவை எடுத்தாள். “சரி, நான் கையெழுத்துப் போடுறேன்.”
இஷாவின் உறவினர் பெண் கண் விழித்ததிலிருந்து, அவளும் கௌதமும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இஷாவுக்கு அனுப்பி இருந்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு ஆசைப்படும்போது, இந்தத் திருமணத்தில் தொங்கிக்கொண்டு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அதனால், கௌதம் அவளுக்குப் பரிசாகத் தரும் பங்களா பற்றிய ஷரத்தை ஒரு கோடு கிழித்து அடித்தாள் இஷா. பிறகு, தன் பெயரைத் துளியும் தயக்கமின்றி எழுதினாள்.
அத்தோடு, இஷாவின் மூன்று வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவள் தன்னைச் சுதந்திரமாக உணர்ந்தாள்.
விவாகரத்து ஒப்பந்தத்தைக் கௌதமிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, அலட்சியமாகச் சொன்னாள், “எனக்கு ஒரு மணி நேரம் டைம் கொடு. என் பொருட்களை எடுத்துக்கிட்டு கெளம்புறேன்.”
கௌதம் உதடுகளை இறுக்கிக்கொண்டு அவளை முறைத்தான். “இந்த பங்களா உனக்குத்தான். நீ வெளியே போக வேண்டாம்.”
“எனக்குத் தேவையில்லை. நீங்க இங்க வாழ்ந்தீங்க, அதனால...” இஷா மெல்லச் சிரித்துவிட்டு, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள், “இது அசுத்தமாயிடுச்சு.”
“இஷா!”
கௌதமின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், எப்போதும் போல அமைதியாக அவனை அறையை விட்டு வெளியே தள்ளினாள் இஷா.
ஒரு மணி நேரம் கழித்து, இஷா கீழே வந்தபோது கௌதம் ஏற்கெனவே கிளம்பிவிட்டிருந்தான். அவள் கையில் இருந்த ஆண்களுக்கான ரோலக்ஸ் வாட்ச்சை திடீரென்று பார்த்தாள். அது அவனது வரப்போகும் பிறந்தநாளுக்காக அவள் தயாரித்திருந்த பரிசு. இப்போது, அது அவள் கண்ணை உறுத்தியது.
`சப்!`
பத்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அந்த வாட்ச்சை, இஷா ஒரு நொடியும் யோசிக்காமல் குப்பைத் தொட்டியில் வீசினாள். பிறகு, ஒரு பெருமூச்சு விட்டு, தன் மூன்று வருடக் காதல் வீணாகிவிட்டதை ஏற்றுக்கொண்டாள்.
இனிமேல், நான் எனக்காக மட்டுமே வாழ்வேன்!
பிறகு, அந்த பங்களாவை விட்டு வெளியேறி ஒரு டாக்ஸியைப் பிடித்தாள். அவளுடைய சொந்த பங்களாவிற்குப் போகச் சொன்னாள்.
சில வருடங்களுக்கு முன்பு அவள் வாங்கிய பங்களா அது. வெங்கடேஷ் குடும்பத்துடன் வசித்து வந்ததால், அவள் இதுவரை அந்த பங்களாவிற்குள் காலடி எடுத்து வைத்ததே இல்லை. அதனால், அவளைப் பார்த்த வேலைக்காரர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வரிசையாக நின்று ஒரே குரலில் சொன்னார்கள், “வாங்க, திருமதி வெங்கடேஷ்.”
இஷா தன் லக்கேஜைக் கீழே வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தாள். நெற்றியைத் தேய்த்துக்கொண்டே அவர்களைத் திருத்தினாள். “இனிமேல், நான் திருமதி வெங்கடேஷ் இல்லை. நான் வெறும் இஷா .”
ஒரு காலத்தில் ‘திருமதி வெங்கடேஷ்’ என்று மற்றவர்கள் அழைப்பதைக் கேட்டு அவள் பெருமைப்பட்டாள். இப்போது, அந்தப் பெயர் அவளுக்கு ஒரு கேலி போல ஒலித்தது.
வேலைக்காரர்கள் எதுவும் கேள்வி கேட்கத் துணியாமல், மரியாதையுடன் பின்வாங்கினர்.
பிறகு, இஷா தன் அறைக்குச் சென்று தன் உதவியாளர் சாருலதாவிற்கு போன் செய்தாள்.
“எப்படி இருக்க?”
சாருலதா ஆச்சரியப்பட்டாள். “என்னடா இது? நீயா எனக்கு போன் பண்ணியிருக்க? ரொம்ப அபூர்வமா இருக்கே!”
“எனக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு. அதனால, நீ சொன்னதைக் கேட்டு என் கரியர்ல கவனம் செலுத்தப் போறேன்.”
“என்னது?” சாருலதா திகைத்துப் போனாள். “ச்சே, எனக்கு காது சரியா கேக்கலையா? இந்த மூணு வருஷமா உன் புருஷனுக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ண. முழு நேர குடும்பத்தலைவியா இருக்கறதுக்காக வேலையைக் கூட விட்ட. என்னாச்சு திடீர்னு? ஏன் டைவர்ஸ் பண்ண முடிவு பண்ண? என்னைக் கலாய்க்கிறியா?”
சாருலதா இஷாவின் உதவியாளர். அவளையும், இஷாவுக்கு நெருக்கமான இன்னும் சிலரையும் தவிர, இஷாவின் இரண்டாவது அடையாளம் யாருக்கும் தெரியாது.
உண்மையில், இஷா ‘மித்ரா’ என்ற பெயரில் ஒரு தலைசிறந்த வழக்கறிஞராகவும் இருந்தாள். இன்டர்நெட்ல வைரலான ஒரு டயலாக் உண்டு: மித்ரா ரெண்டாவது இடத்துல இருந்தா, முதல் இடம் காலிதான்னு அர்த்தம். அவளுடைய பெயரைக் கேட்டாலே பல வழக்கறிஞர்கள் பயத்தில் நடுங்குவார்கள்.
சாருலதா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதபோது, இஷா கேட்டாள், “சமீபத்துல யாராவது என்னைத் தேடினாங்களா? ஏதாவது சுவாரஸ்யமான கேஸ் இருக்கா?”
சாருலதாவின் கண்கள் மின்னின. அவள் ஒருவித வருத்தத்துடன் சொன்னாள், “ஒரு கேஸ் இருக்கு. அதுக்குக் கிடைக்கிற ஃபீஸ் வானத்துல இருந்து கொட்டுற பணம் மாதிரி. ஆனா, அதை ஏத்துக்க யாருக்கும் தைரியம் இல்லை, நீ அதை ஏத்துக்க முடியாது.”
“ஓ?” பொதுவாக அலட்சியமாக ஒலிக்கும் இஷாவின் குரலில் இப்போது ஒரு சிறு ஆர்வம் தெரிந்தது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு