<div style="text-align:justify">எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். 2004 ஆம் சென்னையில் எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காக சென்னையில் சுற்றிக் கொண்டிருந்த போது கவிஞர். மனுஷ்ய புத்திரனுடனான அறிமுகம் கிடைத்தது. அதுவரை எழுதியிருந்த கவிதைகளில் இருக்கும் சிக்கல்களைப் புரியவைத்து நவீன இலக்கியத்தின் பக்கமாக திருப்பிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்த வாசிப்பும் பல கவிஞர்களுடனான நெருக்கமும் கவிதைகளின் மீதான விருப்பத்தை அதிகரித்தது. முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ உயிர்மை பதிப்பகத்தின் வழியாகவே வெளியானது. அதன் பிறகு சைபர் குற்றங்களைப் பற்றிய தொடரான சைபர் சாத்தான்கள் என்ற புத்தகமும் உயிர்மை வெளியீடாக வெளியானது. இந்தச் சமயத்தில் கவிதைகளோடு சேர்த்து சில கட்டுரைகளும் எழுதத் துவங்கியிருந்தேன். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்கள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன. கல்கியில் ‘ரோபோடிக்ஸ்’ குறித்தான தொடர் எழுதக் கிடைத்த வாய்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும்.</div>
<div style="text-align:justify"> </div>
<div style="text-align:justify">கவிதைகளை உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, புது எழுத்து, அம்ருதா உள்ளிட்ட இதழ்கள் வெளியிட்டு உற்சாகமளித்தன. இந்தச் சமயத்திலேயே வலைப்பதிவு எழுதத் தொடங்கியிருந்தேன். ஆரம்பத்தில் வெகு குறைவானவர்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். குறைவானவர்கள் என்பதைவிடவும் சொற்பமானவர்கள் என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும். 2012 ஆம் ஆண்டில் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ வெளியானது. இந்தச் சமயத்தில் தொடர்ந்து எழுதியதாலோ என்னவோ நிசப்தம் வலைப்பதிவும் பரவலான கவனம் பெறத் தொடங்கியிருந்தது. அதன் பிறகு வெளியான ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசால் தோசை 38 ரூபாய்’ கட்டுரைத் தொகுப்பும் பிற புத்தகங்களைக் காட்டிலும் அதிகப்படியான கவனத்தை பெற்றன என்று சொல்ல முடியும்.</div>
<div style="text-align:justify"> </div>
<div style="text-align:justify">2013 ஆம் ஆண்டுக்கான சுஜாதா இணைய விருது நிசப்தம் தளத்திற்குக் கிடைத்தது. </div>
<div style="text-align:justify"> </div>
<div style="text-align:justify">நிசப்தம் அறக்கட்டளை நல்லதொரு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பல லட்ச ரூபாய்கள் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. பல பயனாளிகளுக்கு உதவ முடிந்திருக்கிறது. எழுத்து வழியாகச் செய்ய முடிந்த முக்கியமான காரியம் இது என்று நினைத்துக் கொள்கிறேன்.</div>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு